29/May/2021 07:13:07
ஈரோடு, மே: ஈரோடு மாவட்டம், கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு
பணிகளை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டுமென பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக, கீழ்பவானி முறைநீர்
பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலர் கி.வடிவேல், தமிழக விவசாயிகள் சங்க(கே.சி) மாநிலத் தலைவர்
கே.சி.இரத்தினசாமி, தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்டத் தலைவர் எஸ்.பெரியசாமி,
தமிழ் நாடு விவசாயிகள் சங்க
மாநிலத் துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்
தலைவர் கி.வே.பொன்னையன், புகழுர்
பாரி சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கத்தலைவர்
எம்.வி.சண்முகராஜ், தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி
இரா.செல்வம் ஆகியோர் தமிழக வீட்டுவசதித்துரை
அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களை விளக்கி வெளியிட்ட கூட்டறிக்கை:
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் 9.11.2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (பொ.ப.து) எண்:278 -இன்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்ததாரரும்
தேர்வு செய்யப்பட்டு முறையான ஆணைகளும் வழங்கப்பட்டு
வேலைகள்
தொடங்கப்பட்டன.
கீழ்பவானி பாசனக் கட்டமைப்பு செயலிழந்து
பாசனத் திறனை முற்றாக இழந்து வருகிறது. ஒவ்வொரு பாசன காலத்திலும் ஆயக்கட்டு பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய தண்ணீர் சென்று சேராமல் பெரும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2009 -ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கீழ்பவானி
பாசனக் கட்டமைப்பை நவீனப்படுத்தி மேம்படுத்த போடப்பட்ட மோகனகிருஷ்ணன் தலைமையிலான
வல்லுநர் குழு போடப்பட்டது.
திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட வல்லுநர் குழுவின்
அறிக்கையின் படியே தற்போதைய மேம்பாட்டுப் பணிகள்
நடந்து வருகின்றன. 2010 -ஆம் ஆண்டு அரசாணை (பொ.ப.து) எண்:215/
19-07-2010-இன் படி ரூ 615 கோடியை முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசு ஒதுக்கீடும் செய்தது.
ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டிருந்த
இந்த கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலையை
அரசானண( பொ.ப.து) எண்:278 -மூலம் அதிமுக அரசு செயல்படுத்த முன்வந்தது. அதற்காக
ரூ 933 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்தது
இந்நிலையில் சிலர் அரசியல் உள்நோக்கத்தோடு
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலையை எடப்பாடி பழனிசாமி அரசு தான் முதன் முதலில் தொடங்கியிருப்பது
போல தவறான கருத்தை உருவாக்கி வருகின்றனர். சீரமைப்பு வேலைகளில் சிலர் மாற்றுக் கருத்து தெரிவித்து வந்தனர்.
எனவே சீரமைப்பு பணிகளை இணக்கமான வகையில்
செயல்படுத்துவதற்கு ஏற்பாடு
செய்வதாகக் கூறி, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் 27 /05/ 2021 அன்று மாலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு
அதிகாரபூர்வமற்ற (Informal) கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் கலந்துகொள்ள வருமாறு சில
அமைப்புகளை அழைத்திருந்தார்.
அமைச்சரின் அழைப்பிற்கிணங்க
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு
பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, L 2 பாசன சபைத் தலைவர் அருணாசலம், L11 பாசன சபைத் தலைவர் குருசாமி , தமிழக விவசாயிகள் சங்கம்( கே.சி) ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு ஆகியோர் அமைச்சர் சு.முத்துசாமியையும், மாவட்ட ஆட்சியரையும் பொதுப் பணித்துறை அதிகாரிகளையும் தனியாக சந்தித்து திட்டமிட்ட
அடிப்படையில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற ஆவண செய்ய வேண்டி அமைச்சர் அவர்களிடம் மனுவையும்
கொடுத்து விளக்கிப் பேசினர்.
பிறகு சீரமைப்பு பணிகளில் மாற்றம் செய்யக் கோருபவர்களையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர்
தனியாக சந்தித்து பேசினர். பிறகு அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் சென்ற குழுவினரிடம்
6 இடங்களில் வேலைகளைச் செய்து ஆகஸ்ட்-15 -ஆம் தேதி தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யலாம்
மற்ற பிரச்னைகளை பிறகு பேசிக்கொள்வோம் எனத் தெரிவித்தார். இது
தவிர வேறு எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் தற்போது ஒரு பிரிவினர் அமைச்சர் சு.முத்துசாமியிடம் மீண்டும் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து பணிகளைத் தொடரலாம் என்று கூறியதாகவும் அதை பாசன சபையினரும், விவசாயிகள்
சங்க பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இந்த செய்தி உண்மைக்கு மாறானது.
நம்முடைய தெளிவான கோரிக்கை: திட்டப்படி
வேலைகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதேயாகும்.மீண்டும் குழு அமைத்து ஆய்வு செய்வது என்பதெல்லாம் வேலையை
முடக்குவதறகான நடவடிக்கையாகவே
கருதுகிறோம்.
பல்வேறு குழுக்கள் விரிவான ஆய்வுகள்
செய்து திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த பின் மீண்டும் அதை பின்னோக்கி தள்ளி
விடும் முயற்சிகளில் எங்கள் அமைப்புகளுக்கு உடன்பாடில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
1996- இல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் தொடங்கிய கீழ்பவானி
மேம்படுத்தும் திட்டப்பணிகளை 2021-ல்
முதல்வராகியுள்ள மு.க.ஸ்டாலின் நிறைவு செய்து பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுகிறோம்.