09/May/2021 08:03:14
புதுக்கோட்டை மாவட்டத்தில்
கொரோனா தொற்றாளர்களுக்கு உரிய சிகிச்சையை வழங்குவதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு
கூடுதல் ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் மருந்து, பரிசோதனை கருவிகளை கூடுதலாக வழங்கக்கோரி மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியிருப்பது:புதுக்கோட்டை
மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதுக்கோட்டை
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன்,
ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் கண்காணிப்பு கருவி உள்ளிட்டவைகளை கூடுதலாக வழங்க வேண்டும். மேலும்,
நாள் ஒன்றுக்கு 3,720 லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் 2,500 லிட்டர் தான் கையிருப்பு
உள்ளது. தற்போது வந்துள்ள 6,100 லிட்டர் போக
தேவையான 12,000 லிட்டருக்கு மேலும் 6,00 லிட்டர் கூடுதலாக தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
198 ரெம்டெசிவர் மருந்து கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் 2000 ரெம்டெசிவர் மருந்து
தேவை , 300 ஆக்ஸிஜன் கண்காணிப்பு கருவி தேவை என மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆகியோரின்
கருத்து கேட்புக்கு பின்னர், முதல் கட்டமாக தேவைப்படும் ஆக்ஸிஜன், ரெம்டெசிவர், ஆகிஸிஜன்
அளவை கணக்கிடும் கருவி உள்ளிட்டவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்டுள்ளேன்.
உடனடியாக தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துள்ளது.கொரோனா நோயாளிகளுக்கு தேவையான தரமான சிகிச்சை,
உணவு, அவர்களுடன் வருவோருக்கு தங்குமிடம் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
மேலும், கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், கூடுதல் சிகிச்சை மையங்கள்
தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.