09/Nov/2025 02:23:50
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சேதமடைந்துள்ள பிரமாண்ட சிவன் சிலை தடாகச்சுவற்றை சீரமைத்துர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த ஒப்பிலாமணி உடனுறை மெய்நின்றநாதர் கோயில் உள்ளது.இக்கோயிலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் முன்புள்ள குளத்தின் நடுவில் 82 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவர், தடுப்புச்சுவர், நடைபாதை அமைக்கப்பட்டது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் நடை பாதை வழியாக சிவன் சிலையை சுற்றிப் பார்ப்பதுடன், தினசரி நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சிக்காகவும் வந்து செல்கின்றனர்.மேலும், சிவராத்திரி உள்ளிட்ட தினங்களில் ஏராளமானோர் கிரிவலம் செல்கின்றனர்.
இந்நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் மழையால் தடாகச்சுவற்றில் விரிசல் ஏற்பட்டு சாய்ந்து விடும் நிலையில் உள்ளது.
நடை பாதை மற்றும் தடாகத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அச்சத்துடனேயே சிவன் சிலையை சுற்றி வருகின்றனர்.
மேலும், தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் குளத்தின் தடுப்புவர் மேலும் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளதால் உடனே சேதமடைந்த சுவற்றை சீரமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(படம்)கீரமங்கலத்தில் மெய்நின்றநாதர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிவன்சிலை