19/Aug/2021 12:11:20
ஈரோடு, ஆக: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதா(44) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர், மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதா.
ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த இவர், முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியை தொடங்கினார். 19 ஆண்டுகள் பணி் அனுபவம் உள்ள இவர் கடந்த 2019 ஆண்டு வரை சிவகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியாற்றினார். இதன்பிறகு 2020 ஆண்டு பதவி உயர்வில் சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியாராக பொறுப்பேற்றார்.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து தலைமை ஆசிரியர் டி.லலிதா கூறியதாவது:மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த கல்வியை தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கற்றுக்கொடுக்கும் செயல்முறைகளை பணியாற்றிய பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறேன். தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு எளிதாக கற்றுக்கொடுக்க முடியும். தலைமைப் பண்பு குறித்து சர்வதேச அளவிலான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளேன்.
இயற்கையை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையை ஏராளமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பாக 160 வீடியோக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்து வைத்துள்ளேன். இயற்கை சூழலில் வீடு ஒன்றை கட்டுவதற்கான மாதிரியை தயார் செய்து வைத்துள்ளேன் என்றார்.