logo
 ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறிய 5 கடைகள் பூட்டு சீல் வைப்பு: முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் அபராதம் விதிப்பு

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறிய 5 கடைகள் பூட்டு சீல் வைப்பு: முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் அபராதம் விதிப்பு

12/May/2021 06:58:52

ஈரோடு, மே: ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறிய 5 கடைகள் பூட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும்முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டும் மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

மேலும் மாநகர் பகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து கடைகளுக்கு அபராதமும் பூட்டி சீல் வைத்தும் வருகின்றனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நான்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த உதவி ஆணையாளர்கள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கடைகள் வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்து விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று ஒரே நாளில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத கறிக்கடை, டீ கடை என 5 கடைகளுக்கு  தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அந்த 5 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதைப்போல் முகக் கவசம் வாய் மூக்கை மூடாமல் கழுத்துக்கு கீழ் அறிந்தவாறு சென்றதாக 50 நபர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே சுற்றாமல் வீட்டில் இருக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்

Top