logo
ஈரோடு மாநகரில் முதல் நாளில் முகக் கவசம் அணியாமல் வந்த 80 பேருக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு மாநகரில் முதல் நாளில் முகக் கவசம் அணியாமல் வந்த 80 பேருக்கு அபராதம் விதிப்பு

10/Mar/2021 02:52:14

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாநகரில் முதல் நாளில் முகக் கவசம் அணியாமல் வந்த 80 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டுமெனவும், முககவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். 

இதையடுத்து மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணிந்து  வராதவர்களுக்கு  ரூ. 200 அபராதம் விதித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் முக கவசம் அணியும் பழக்கம் அதிகரித்தது.இதையடுத்து ஈரோட்டில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மீண்டும் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் முக கவசம் அணியும் பழக்கம் முற்றிலும் குறைந்து உள்ளது. இதையடுத்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர்  துப்புரவு ஆய்வாளர்கள், போலீசார், வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு நேற்று முதல் ரூ .200 அபராதம் விதித்தனர். 

இதன்படி  முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 80 பேருக்கு தல ரூ .200 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 16,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண் டனர். இதில் 4 கடைகளில் முக கவசம் அணியாமல் வந்த பொது மக்களை கடைக்குள் அனும தித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அந்த 4  கடைகளுக்கு மட்டும் தலா 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 2000 அபராதம் வசூலிக்கப்பட்டது. கடைகளில் வாடிக்கையாளர்கள் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். முக கவசம் அணிந்து வராதவர்களை கடைக்குள் அனுமதிக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையாளர் மா.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

Top