30/Dec/2020 08:00:38
புதுக்கோட்டை, டிச: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், பாக்குடி துணைமின் நிலையத்திலிருந்து ஆலங்குடி, பேராம்பூர் ஊராட்சிகளுக்கு கூடுதல் மின்சாரம் வழங்கும் நிகழ்வை சுகாதாரத்துறை அமைச்சர் டி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் மின் வாரியம் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்த மின் அழுத்த மின்சாரம் வரும் பகுதிகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பாக்குடி துணைமின் நிலையத்திலிருந்து ஆலங்குடி மற்றும் பேராம்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கு கூடுதல் மின்சாரம் வழங்கும் பணிகள் தொடக்கி வைக்கப்பட் டுள்ளது. ஏற்கெனவே வடுகப்பட்டி துணைமின் நிலையத்திலிருந்து ஆலங்குடி மற்றும் பேராம்பூர் ஊராட்சிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
இதனால் 21 கி.மீ. தொலைவிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததால் 190 வாட் மின்சாரம் இப்பகுதி பொதுமக்களுக்கு கிடைத்தது.. ஆனால் தற்பொழுது 3 கி.மீ தொலைவிலுள்ள பாக்குடி துணைமின் நிலையத்திலிருந்து உதய் திட்டத்தின் கீழ் ரூ.4.73 லட்சம் செலவில் ஆலங்குடி, பேராம்பூர் ஊராட்சிகளுக்கு 21 மின்மாற்றிகள் மூலம் கூடுதல் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு தினமும் 240 வாட் மின்சாரம் கிடைக்கும். இதன் பயனாக குறைமின் அழுத்தம் மின்சாரம் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், 260 விவசாய மின் இணைப்புகளும், 985 வீடு மற்றும் பிற மின் இணைப்புகளும் பயன்பெறும். மேலும் இப்பகுதி பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், செயற் பொறியாளர்கள் மயில்வாகணன், முருகன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், உதவிப் பொறியாளர் சத்தியசீலன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.