16/Oct/2020 08:41:11
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பொது வெளியில் முகக்கவசம் அணியாமல் நடமாடியது, எச்சில் துப்பி அசுத்தம் செய்த குற்றத்துக்காக மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் 6,500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட பரிசீலனையில் உள்ளது. கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க முக கவசம், சமூக இடைவெளி, சோப் அல்லது கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை அரசு அறிவித்தது.
மாவட்டத்தில் முதலில் முக கவசம் அணியாமல் பலர் சுற்றிக் கொண்டிருந்தனர். இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ 500, பொது இடங்கள் சமூக இடைவெளி கடை பிடிக்காதவர்களுக்கு ரூ.500, சமூக இடைவெளி கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயரம் அபராதம் அறிவிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ் உயரதிகாரிகள் மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இணைந்து அபராதம் விதித்தனர். மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு மட்டும் 100 பேருக்கு முக கவசம் அணியாமல் வருகிறது, பொது இடங்களில் எச்சில் துப்புவது சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் 6,500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ 15 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்