05/Oct/2020 12:45:51
தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். தேனியிலிருந்து இன்று பிற்பகலில் சென்னை திரும்பவுள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் வரும் 7-ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், தேனியில் கடந்த இரண்டு நாள்களாக தங்கியிருந்த ஓ. பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று பிற்பகலில் சென்னை திரும்ப உள்ளார். இது குறித்து, தேனி அருகே செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், இன்று பிற்பகலில் தேனியிலிருந்து சென்னை புறப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7-ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தனது சுட்டுரைப் பக்கத்தில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 7-ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பகவத்கீதையின் கீதாசாரத்தை மேற்கோள்காட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.