22/Jun/2021 07:42:45
புதுக்கோட்டை, ஜூன்:புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று கோவிட் தடுப்பூசி வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு செவ்வாய்க்கிழமை (22.06.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில்
கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டு, மாவட்டத்தில்
கோவிட் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. மாவட்டங்களில் அதிகளவில் மருத்துவ முகாம்கள், தடுப்பூசி
முகாம்கள், பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று காய்ச்சல் பரிசோதனை போன்றவை
நடத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி முகாம்களுக்கு வரஇயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களது வீடுகளுக்கே சென்று
தடுப்பூசிகள் வழங்கிட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு
மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளின்
வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி வழங்கும் பணி
நடைபெறும் இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 1,500 மாற்றுத்திறனாளிகளின்
இல்லங்களுக்கு நேரடியாக
சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை 2,000 மாற்றுத்திறனாளிகளின்
வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடுவதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்க கூடிய தடுப்பூசி எண்ணிக்கைகளின் அடிப்படையிலும், தினசரி தேவைக்கேற்பவும் மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகளவில் உள்ளது.
மேலும் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த வருகை தருவதால் அதிக கூட்டம் கூடாமல் தடுப்பூசி வழங்கிடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர். இந்த ஆய்வில் நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.