17/Aug/2021 05:27:58
ஈரோடு, ஆக: ஈரோடு மோசகவுண்டன்பாளையம், கல்யாணசுந்தரம் வீதியைச் சேர்ந்த அன்னபூரணி என்பவர் ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்து அளித்த புகார் மனு விவரம்:
ராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை சோலார் பகுதியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளராக செயல்பட்டு வருபவர் தங்கள் நிறுவனத்தின் மூலம் இடி தாக்கிய பழமையான கலசத்தை வாங்கி வெளிநாட்டுக்கு விற்ற வகையில் பல கோடி ரூபாய் வரை வர வேண்டி உள்ளதாகவும், இந்த பணத்தை தனி நபருக்கு தராமல் அறக்கட்டளைக்கு மட்டுமே தர இருப்பதாகவும் எனவே இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக சேரும் பெண்களுக்கு ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று கூறி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்களிடம் பணம் வசூல் செய்துள்ளார்.
கடந்த 5 வருடங்களாக நான் மட்டும் அந்த நபரிடம் ரூ .10 லட்சம் வரை பணம் கொடுத்து உள்ளேன். ஈரோடு மாவட்டம் முழுவதும் இதே போல் 517 பெண்களிடம் இதேபோல் பல கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து இரிடியம் விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி போலியான மத்திய, மாநில அரசு ரிசர்வ் வங்கி முத்திரைகளையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த கும்பல் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்என மனுவில் குறிப்பிட்டுள்ளார்..
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்பி சசிமோகன், புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மனுவில் உண்மைத்தன்மையைப் பொருத்தே அடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள்.