logo
 மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி  திட்டத்துக்கு மானிய உதவி: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்துக்கு மானிய உதவி: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

09/Jul/2021 08:51:33

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி  திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரினவளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுயஉதவிக்குழுக்கள், கூட்டுபொறுப்பு குழுக்கள், மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். 

இத்திட்டத்தின் கீழ் பொதுபிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும்; மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டீல் மானியத் தொகையின் உச்சவரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும். 

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் எண்: 23, லெட்சுமிபுரம் முதல் வீதி, புதுக்கோட்டை- 622001 -எனும் முகவரியில் இயங்கும் புதுக்கோட்டை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04322-220069 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.7.2021 ஆகும். மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும்         கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

Top