04/Jun/2021 04:31:48
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடு பணியை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர்.பெ.வே.சரவணன், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலையில் தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வெள்ளிக்கிழமை (4.6.2021) நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் கோவிட் தொற்று காலத்தில் சிறைத்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், முன்களப்
பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். சிறையில்
உள்ள கைதிகளில் பரோலில் விடுவதற்கு தகுதி
படைத்த கைதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு பரோலில் வெளியில் விடுவதற்கு தேவையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை பரோலில் விடுவதற்கு வாய்ப்பில்லை. இவர்களை தவிர சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனையில் உள்ள கைதிகள் கடந்த ஆண்டு பரோலில் சென்றுள்ளார்கள்.
அவர்களுக்கு இந்த ஆண்டு எத்தனை நாட்கள் பரோல் வழங்கலாம் என்ற கணக்கு உள்ளது. மேலும் சிறைச்சாலைகளில் 57 சதவீதம் கைதிகளே உள்ளனர்.
கோவிட் காலத்தில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க தேவையான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கைதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
தமிழக சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் இதுவரை 1,700 கைதிகள்
தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் சிறைகளில் உள்ள அனைத்த கைதிகளுக்கும் கட்டாயம் கோவிட் தடுப்பூசி போட வேண்டும் என்று
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
கைதிகளுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் சிறைகளில் உள்ள
அனைத்து கைதிகளுக்கும் கோவிட் தடுப்பூசி போடப்படும்.
கோவிட் காலத்தில் சிறைகளில் மருத்துவ பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்பட்டு கைதிகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கி பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசின் உத்தரவின் படி சிறைகளில் சட்ட விரோத பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. எனினும் சட்ட விரோத பொருட்கள் கொண்டு செல்லப்படுவது கண்காணிக்கப்பட்டு பிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சிறைகளில் சட்ட விரோத பொருட்கள் கிடைப்பதை தடுத்து கைதிகளுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து தமிழக சிறைத்துறை செயல்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் ரகுபதி.
இதில், பொது சுகாதார துணை இயக்குநர் மரு.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் க. நைனாமுகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.