22/May/2021 01:31:06
ஈரோடு, மே: ஈரோடு நந்தா கல்லூரியில் 250 படுக்கை வசதியுடன் கூடிய தனிமைப்படுத்துதல்
மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால
அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது. வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.
முத்துசாமி, ஆட்சியர் சி. கதிரவன் ஆகியோர்
மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 வீட்டுக்கு
ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள்
என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள
60 வார்டுகளிலும் 100 வீட்டுக்கு
ஒரு பொறுப்பாளர் வீதம் 400 குழுக்கள் அமைக்கப்
பட்டது.
இந்தக் குழுக்களில் அங்கன்வாடி ஊழியர்கள்,
மகளிர் சுய உதவிக் குழுவினர்,தன்னார்வலர்கள்
உள்ளனர். 100 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற
அடிப்படையில் இந்த பொறுப்பாளர்கள் கடந்த 17ஆம் தேதி முதல் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று சளி காய்ச்சல் உள்ளதா என்று கேட்டறிந்து வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர்
மா. இளங்கோவன் கூறியதாவது:
மாநகர் பகுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு
தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தற்போது வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது.
இதில் காய்ச்சல், இருமல், சளி
,உடல் வலி போன்ற கொரோனா அறிகுறி இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்
கொள்ள அறிவுறுத்துவார்கள்.
அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளவர் களுக்காக
நந்தா கல்லூரியில் 250
படுக்கை வசதியுடன் கூடிய தனிமை படுத்துதல் சிறப்பு மையம் அமைக்கப் பட்டுள்ளது. இது
சனிக்கிழமையிலிருந்து செயல்படத் தொடங்கியுள்ளது.
வீடுகளில் தனிமைப்படுத்தப் பட முடியாதவர்கள் இந்த தனிமைப்படுத்தல் சிறப்பு மையத்தில் தங்கி கொள்ளலாம். அவர்களுக்கு
ஆர்டி- பி.சி.ஆர் பரிசோதனை செய்து முடிவில் தொற்று இருந்தால் அவர்கள் அந்த தனிமைப்படுத்துதல் மையத்திலிருந்து ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள். பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்றும் முடிவு வந்தால் அவர்கள்
தனிமைப்படுத்துதல் மையத்தில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார் அவர்.