14/Oct/2020 05:44:14
கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்தபடி கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி-ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னிமலையில் இன்று (14-10-2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள் தமிழக அரசு அறிவித்தபட, நலவாரியத்தில் இருந்து நிதியுதவி பெறாத அனைத்து கைக்தறி நெசவாளர்களுக்கும் நிபந்தனையின்றி ரூ.2000/-கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். நெசவாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை மாதம் ரூ3,000 ஆக உயர்த்த வேண்டும்; ஓய்வூதியத்தை மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் தவறாமல் வழங்க வேண்டும். சென்கோப்டெக்ஸ் நெசவாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்ட விரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும் அறிவித்துள்ள நிர்வாகக் குழுவை ரத்து செய்து முறையாகத் தேர்தல் நடத்த வேண்டும்.
சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சி.கண்ணுசாமி தலைமை வகித்தார். சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி, சங்க ஒன்றியப் பொருளாளர் மு.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, சங்க மாவட்டத் தலைவர் வ.சித்தையன், சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.பொன்னுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சென்கோப்டெக்ஸ்,காளிக்கோடெக்ஸ், ஜீவா டெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நெசவாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்ட அறிவிப்பு போராட்டத்தின் நிறைவாக, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், 15 நாள்களுக்குப் பின்னர், மாவட்டம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களைத் திரட்டி, ஈரோட்டில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தொழில் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.