25/Jun/2021 05:47:49
ஈரோடு ஜுன்: கொரோனா ஊரடங்கையும் மீறி ஈரோடு அருகேயுள்ள ஆற்றங்கரையோரங்களில் நடத்தப்படும் பரிகார பூஜைகளால் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறந்த பரிகாரத் தலங்களில் பவானியும் ஒன்று. பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
வருடம் முழுவதும் எல்லா நாட்களிலும் இத்தலத்துக்கு வந்து அதிகஅளவில் மக்கள் வந்து பரிகாரங்கள் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா 2-ஆம் அலையின் காரணமாக சங்கமேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜைகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடை உத்தரவை மீறி காவிரி , பவானி ஆற்றங்கரையோரங்களில் சில பூஜகர்கள் பரிகார பூஜைகளை செய்து வருகின்றனர் . இதில் மக்களைத்திரள்வதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகிவிட்டது.
ஏற்கெனவே புறநகர் பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்று ஒரே இடத்தில் அதிக அளவு மக்களை கூட்டி பரிகார பூஜைகள் நடத்தப்படுவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்று அரசின் உத்தரவை மீறி செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.