logo
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி  புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 53 பேர் கைது.

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 53 பேர் கைது.

03/Feb/2021 03:35:27

புதுக்கோட்டை,  பிப்: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோரிக்கைகள்: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு  பழைய  ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பணியில் காலியாக உள்ள 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுத்துறையில் அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள்,  செவிலியர்கள் மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.  

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஜபருல்லா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் இரா.மங்கலபாண்டியன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் குமரேசன்,  ரெங்கசாமி, குணசேகரன், பழனிச்சாமி, பத்மாவதி, கருப்பையா  உள்பட 53 பேரை போலீசார் கைது செய்தனர். 


Top