logo
தினமணி நாளிதழுக்கு சி.பா. ஆதித்தனார்  விருது

தினமணி நாளிதழுக்கு சி.பா. ஆதித்தனார் விருது

13/Jan/2021 02:06:48

சென்னை: தினமணி நாளிதழுக்கு தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது பெற தினமணி நாளிதழ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது தினமணி நாளிதழுக்கும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது கல்கி வார இதழுக்கும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது செந்தமிழ் திங்களிதழுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் அவர்களால் வழங்கப்பட உள்ளன. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக ரூ.1 லட்சம் ரொக்கமும் தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு ரூ. 5 இலட்சமும் , தமிழ்ச் செம்மல் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரமும் வழங்கப்படும்.  மேலும், இவர்களுக்கு விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top