25/Mar/2021 05:08:12
ஈரோடு .மார்ச்: பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜேகே (எ) ஜெயக்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாசம்மாவூர், கல்லுக்கடை காலனி, நடுவலசு,நல்லாம்பட்டி நகரம், நல்லாம்பட்டி மாரியம்மன் கோவில், நல்லாம்பட்டி காலனி, ஜே ஜே நகர்,பெத்தாம் பாளையம், ஓசைப்பட்டி பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார்.
அப்போது பொதுமக்களிடைய அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பேசியதாவது: கடந்த பத்து ஆண்டுகளாக பெருந்துறை பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து வளர்ச்சி பெற வைத்தது அம்மா அரசும் அவர் வழியில் நடக்கும் எடப்பாடி அரசும் தான். தற்போது பயன்பாட்டிற்கு வர உள்ள கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் உள்ளிட்டவை எடப்பாடி அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டம் .இதை எந்த தனி மனிதனும் சொந்தம் கொண்டாட முடியாது.
இந்த திட்டங்களை தாங்கள்தான் கொண்டு வந்ததாக யாராவது பிரசாரம் செய்தால் அதனை பொதுமக்கள் நம்ப தேவையில்லை. மேலும் இது போன்ற ஏராளமான பணிகள் பெருந்துறைக்கு கொண்டு வரவேண்டுமெனில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
வருடம் தோறும் ஆறு சிலிண்டர்கள், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 உதவி தொகை, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பெற நீங்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர். பிரசாரத்தின் போது ஒன்றியச் செயலாளர் விஜயன் (எ) ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுசாமி, யூனியன் சேர்மன் சாந்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.