10/Apr/2021 07:27:25
ஈரோடு, ஏப்: ஈரோட்டில் 19 பேரை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை காலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் ஈரோடு வ.வ.சி பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட் டில் பாதுகாப்பு முறைகளை முறையாக பின்பற்றப் படுவது குறித்து கள ஆய்வு மேற்கொண் டனர்.
பின்னர் தோனி பிரிட்ஜில் உள்ள மீன் மார்க்கெட், கருங்கல் பாளையம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மீன் மார்க்கெட்டில் கடைகளுக்கு இடையே சமூக இடைவெளி பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து மரப்பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒரு ஹோட்டல் மற்றும் பேக்கரி கடை யில் பாதுகாப்பு முறையாக பின்பற்றப்படாததால் அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது மரப்பாலம் நால்ரோடு பகுதியில் வந்த ஷேர் ஆட்டோவிலிருந்து பயணிகளை இறங்கிக் கொண்டிருந்தைப் பார்த்தபோது அந்த ஆட்டோவில் 19- க்கும் மேற்பட்ட பயணி கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஷேர் ஆட்டோ உரிமையாளருக்கு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ரூ 5,000 அபராதம் விதித்தார்.
மேலும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் அந்த ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின் நகர் நல அலுவலர் முரளி சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உள்பட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.