logo
 எய்டு இந்தியா சார்பில் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.6 லட்சத்தில்  மருத்துவ உபகரணங்கள் எம்.சின்னத்துரை எம்எல்ஏ வழங்கல்

எய்டு இந்தியா சார்பில் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.6 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் எம்.சின்னத்துரை எம்எல்ஏ வழங்கல்

19/Jun/2021 10:10:50

புதுக்கோட்டை, ஜூன்: கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்  சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முன்னிலையில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

எய்டு இந்தியா நிறுவனம் வழங்கிய மருத்துவ உபரகணங்களைக் கொண்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையத்தை திறந்து வைத்து எம்.சின்னத்துரை எம்எல்ஏ., பேசியது:

கோவிட் கவனிப்பு மையத்திற்குத் தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் செரிவூட்டிஆக்சிஜன் கிளீனர்  உள்பட ரூ.6 லட்சம் மதிப்பில் பல்வேறு உபகரணங்களைக் கொண்டு  இந்தக் கோவிட் கவனிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுத்து வருவது, புயலில் மற்றும் கோவிட் நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருவது என கோடிக்கணக்கான மதிப்பிலான நலத்திட்டங் களை புதுக்கேர்டை மாவட்டத்தில் எய்டு இந்தியா நிறுவனம் செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக  தற்போது கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு இத்தகைய பேருதவியைச் செய்துள்ளது. மேலும், இம்மருத்துவமனைக்குத் தேவையான உதவிகளை செய்ய இருப்பதாகவும், கறம்பக்குடி, கீரனூர் அரசு மருத்துவ மனை களுக்கும் உதவ உள்ளதாகவும் தெரிவித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை போதுமாக இடவசதியின்றி மிகுந்த சிரமத்திற்கு இடையில் இயங்கி வருகிறது. இதை சரிசெய்வதோடு, கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். கந்தர்வகோட்டைக்கு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனை வந்தபிறகு கந்தவர்கோட்டையை சுற்றியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய பயனை அளிக்கும். சுகாதாரத்துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இத்தகைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மருத்துவத்துறை இணைக் இயக்குனர் கே.ராமு, துணை இயக்குனர் கலைவாணி, கவிஞர் எஸ்.கவிவர்மன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் .ராமையன், ஒன்றியக் கவுன்சிலர் ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் ராதிகா, எய்டு இந்திய நிறுவன ஊழியர் ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக எய்டு இந்திய நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார்மருத்துவர் ஹரிகரன் நன்றி கூறினார்.

                                                  

        

Top