logo
மாணவர்களுக்கு சொந்தச் செலவில் 10 கிலோ அரிசிப்பை வழங்கிய கவரப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

மாணவர்களுக்கு சொந்தச் செலவில் 10 கிலோ அரிசிப்பை வழங்கிய கவரப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

17/Jun/2021 10:01:07

புதுக்கோட்டை,ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தைச் சேர்ந்த கவரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 126 பேரின் குடும்பங்களுக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியை விசாலாட்சி மற்றும் ஆசிரியர்கள் சார்பாக ரூ 50 ஆயிரம் மதிப்பில்   10 கிலோ அரிசிப் பை இலவசமாக வழங்கப்பட்டது.

இது குறித்து அப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை மீனா இராமநாதன் கூறியதாவது: இந்த கொரோனா தீநுண்மியால் உலகமே பொருளாதார ரீதியாக சரிந்து கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில் கூலி வேலை பார்க்கக்கூடிய கிராமத்து மக்களின் நிலைமையை சொல்லில் அடங்காது.

நாங்கள் கிராமத்தில் பணிபுரிவதால் எங்களால் அவர்களது கஷ்டங்களை நன்கு உணரமுடிந்தது. ஆனால் எந்த ஒரு விளக்கிற்கும் தூண்டுகோல் வேண்டும் என்பதுபோல இந்த கடினமான காலகட்டத்தில் எங்கள் அருகாமைப் பள்ளியான பாட்னாபட்டி தொடக்கப்பள்ளியில் ஒரு வாரத்திற்கு முன்னதாக அங்குள்ள மூன்று ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு அரிசி வழங்கினார்கள்.

தை அறிந்தவுடன் எங்களுக்கும் அந்த எண்ணம் தோன்றியது. அத்துடன் நம்மைப் பார்த்து இன்னும் சிலருக்கு இதே போல் நாமும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற உந்துதலும் வரலாம். இந்த  முடக்க காலத்தில் மக்களின் பிரதானத்தேவை உணவுப்பொருள்தான். ஆகையால் நாங்களும் அதையே மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்தோம்.

அந்த வகையில் எங்கள் பள்ளியில் பயிலும் 126 குழந்தைகள், பள்ளியின் தூய்மைப்பணியாளர், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்கும்  தற்போது  தலா  10 கிலோ வீதம் ரூ 50 ஆயிரம்  மதிப்புள்ள அரிசி வழங்கப்பட்டது.

பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டதைப் பார்த்த எங்களுக்கும் மனநிறைவும் திருப்தியும் ஏற்பட்டது என்றார் . ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியைகள் மீனா,அழகுமணி,காவேரியம்மாள்,ஆசிரியர் பெஞ்சமின் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Top