21/Nov/2020 07:25:49
ஈரோடு: ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று முதல் பவானிசாகர் அணையிலிருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மீண்டும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 96.13 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 574 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாயிரத்து 100 கன அடி என மொத்தம் 3 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.