04/Jun/2021 02:42:54
ஈரோடு, ஜூன்: தமிழக மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி பிரதமருக்கு ஈரோடு காங்கிரஸார் மனு அனுப்பி வைத்தனர்.
குறைவான தடுப்பூசி மருந்து கிடைப்பதால்,
கொரோனா பாதிப்பு, இறப்பை தடுக்க முடியாததால், அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை
உறுதி செய்யும் வகையில் மருந்து ஒதுக்கீடு
வழங்க கோரி, ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் மூலம், பிரதமருக்கு ஈரோடு மாநகர மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மனு வழங்கினர்.
கோரிக்கை மனு தொடர்பாக மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி, எஸ்.வி.சரவணன் ஆகியோர் கூறியதாவது:கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமும், இறப்பும் அதிகமாக உள்ளது. இந்தியா தவிர பல நாடுகள் கடந்த, 2020லேயே, அனைவருக்கும் தடுப்பூசி போட்டு, பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். இந்தியாவில், 140 கோடி மக்கள் உள்ள நிலையில், 39 கோடி தடுப்பூசி மருந்துக்கே ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மே, 31-க்குள், 21.31 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட திட்டமிட்டது. 4.45 கோடி பேர் மட்டுமே, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இது, 3.17 சதவீதமாகும். தடுப்பூசி போட துவங்கியது முதல் சராசரியாக தினமும், 16 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலை நீடித்தால் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க பல மாதங்கள் ஆகும்.
இந்தியாவில் உள்ளவர்களுக்கே தடுப்பூசி கிடைக்காத நிலையில், பல நாடுகளுக்கு, 6.63 கோடி தடுப்பூசியை ஏற்றுமதி செய்து துரோகம் செய்துள்ளது. இந்த மெத்தனப் போக்கை கைவிட்டு, மிக விரைவாக அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கையை மேம்படுத்த வேண்டும் என்றனர்.
நிர்வாகிகள் சுரேஷ், ராஜேஷ்ராஜப்பா, விஜயபாஸ்கர், கே.என்.பாட்ஷா, முன்னாள் துணை மேயர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.