11/Nov/2020 06:13:55
ஈரோடு: குமாரபாளையம் டோல்வேஸ் லிமிடெட் - விஜயமங்கலம் டோல்பிளாசா, சேலம் டோல்வேஸ் லிமிடெட் -வைகுந்தம் டோல்பிளாசா, செங்கப்பள்ளி டோல்வேஸ் லிமிடெட் - கணியூர் டோல்பிளாசா ஆகிய சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீது உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாண வலியுறுத்தி ஏஐடியுசி சுங்கச்சாவடி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 11-11-2020 மூன்று சுங்கச் சாவடிகளிலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் அறிவிப்பின் காரணமாக பேர்வேய்ஸ் (Fairways) நிர்வாகம், நேற்று தன்னிச்சையாக மூன்று சங்கச்சாவடி பணியாளர்களுக்கும் 8.33% போனஸை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தியது. ஆனால், தொழிலாளர்கள் ஈட்டிய மொத்த சம்பளத்திற்கு (Grass Salary) போனஸ் கணக்கிட்டு வழங்குவதற்கு மாறாக, சட்ட விரோதமாக குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிட்டு போனஸ் தொகையை வங்கியில் செலுத்தியுள்ளனர்.
அதோடு, விஜயமங்கலம் மற்றும் வைகுண்டம் சங்கச்சாவடி பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய வருடாந்திர ஊதிய உயர்வையும் சங்கத்தோடு பேசி முடிக்காமல் தன்னிச்சையாக 7% ஊதிய உயர்வை வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளனர்.
பேர்வேஸ் நிறுவனத்தின் தன்னிச்சையான போனஸ் மற்றும் ஊதிய உயர்வு அறிவிப்புகளைக் கண்டித்தும் சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலான போனஸ் மற்றும் ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
விஜயமங்கலம் சங்கச்சாவடியில் 11.11.2020 காலை 7 மணி முதல் சங்க கிளை செயல்தலைவர் கே.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்க கிளைத் தலைவரும் ஏஐடியுசி மாநிலச் செயலாளருமான எஸ்.சின்னசாமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். (நோட்டீஸ் இணைக்கப்பட்டுள்ளது)
பின்னர், பெருந்துறை காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் IVRCL மற்றும் Fairways மேலாளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வரும் 18,19 தேதிகளில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது பேர்வேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நேரில்வந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண ஒப்புக் கொண்டனர். அதனடிப்படையில் காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.