30/May/2021 10:49:04
ஈரோடு, மே: ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்க நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை (மே.30) நேரில் சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதியத்துக்கு ரூ.25 ஆயிரம் நிதி அளித்தனர்.
பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தற்கு நன்றி தெரிவித்ததுடன் முதல்வராக பதவி ஏற்று முதல் முறையாக பெரியார் மண்ணுக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சங்க நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். முதல்வர் நிவாரண நிதிக்கு சங்கம் சார்பாக ரூ. 25 ஆயிரம் நிதி வழங்கிய சங்கத்துக்கு நன்றியும் பாராட்டுக்களையும் முதல்வர் தெரிவித்தார்.
இதையடுத்து முதல்வரிடம் சங்கம்சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில்,
1) மாவட்ட அளவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கும் அரசு அங்கீகார அட்டை வழங்க வேண்டும்.
2) தாலுகா நிருபர்களுக்கும் 5 ஆயிரம் ஊக்க தொகை வழங்க வேண்டும்
3) பத்திரிகையாளர் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீத கட்டண சலுகை ஆந்திர அரசு வழங்குவதை போல் வழங்க வேண்டும்
4) கொரோனாவால் மறைந்த கோபிசெட்டிபாளையம் புதிய தலைமுறை செய்தியாளர் சந்திரசேகர் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கனிவுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இதில், செயலாளர் ஜீவாதங்கவேல் தலைமையில், துணை தலைவர் (தூர்தர்சன் செய்தியாளர்) மூர்த்தி, பொருளாளர் (தினமணி புகைபட கலைஞர்) ரவிச்சந்திரன், துணை செயலாளர் (ஜீ.வி, நிருபர்) நவீன், செயற்குழு உறுப்பினர்கள் செய்தியாளர்கள் (கலைஞர் டி.வி) பழனிச்சாமி, விடுதலை சண்முகம், தினகரன் மகேந்திரன், சத்தியம் டி.வி. வேலுச்சாமி உள்பட சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.