23/May/2021 04:23:47
ஈரோடு, மே:தமிழகத்தில் தளர்வில்லாத முழுமுடக்கம் நாளை(மே.24) முதல் அமலாவதையொட்டி ஈரோடு கடைவீதிகளில் திரண்ட மக்கள் கூட்டத்தால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகிப் போனது.
தமிழகத்தில் கொரோனா 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு புதிய
உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகிறது.
இந்நிலையில் நாளை(24.5.2021)
முதல் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு முடக்கம் அமல்படுத்தப்படுமென அரசு அறிவித்துள்ளது.
முழு முடக்கத்தின் போது காய்கறிகள், மளிகை கடை களும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வழக்கம் போல் அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும். உணவகங்களில் வழக்கம் போல் மூன்று வேளைக ளிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பார்சலில் உணவு வினியோகம் செய்யப்படும். இதைப்போல் அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்படும்.
அத்தியாவசிய பொருட்களான பால்பூத்கள் பால் கடைகள் வழக்கம் போல் செயல்படும். மருந்தகங்கள் ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் செயல்படும். பெட்ரோல் பங்குகள், வங்கி ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் செயல்படும்.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு
செல்லும் வாகனங்களுக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றும்
இன்றும் காலை முதல் இரவு வரை அனைத்து கடைகளும் திறக்க
அரசு அனுமதி அளித்தது. இதேபோல் வெளியூர்
செல்லும் பயணிகளின் வசதிக்காக சனி, ஞாயிறு 2 நாள்களுக்கு
பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பொறுத்தவரை சனிக்கிழமை மாலை முதலே காய்கறி மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து 30 வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
எனினும்
பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை
முதலே அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறந்திருந்தன.
மக்கள் ஒருவாரத்துக்கு தேவையான மளிகை ,காய்கறி வாங்குவதற்காக கடைவீதிகள் குவிந்தனர்.
ஈரோடு மணிக்கூண்டு பகுதி, கே. வி. என் ரோடு,ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், போன்ற கடைவீதிகளில் ஏராளமான ஜவுளி கடைகள் இன்று திறந்திருந்தன. இங்கு மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. பொது மக்கள் முக கவசம் அணிந்து இருந்தாலும் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி இருந்தது. இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சலூன் கடைகளும் திறக்கப்பட்டிருந்ததால் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும்
பழக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு வ. உ. சி பூங்கா அப்பகுதியில் உள்ள
பெரிய மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான
மக்கள் கூடினர். இதனால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது.