14/May/2021 08:47:43
ஈரோடு, மே: கொரோனா பரவல் காரணாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ஈரோட்டில் வீடுகளிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர் கொண்டாடினர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று ஈத்கா மைதானங்களிலும், பள்ளிவாசல்களில் சென்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ரம்ஜான் பண்டிகையின் போது மாவட்டத்திலுள்ள 40-க்கும் மேற்பட்ட ஈத்கா மைதானங்களிலும், 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடை பெறுவது வழக்கம்.அதிலும் ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் மாவட்ட அரசு காஜி தலைமையில் நடைபெறும் சிறப்பு தொழுகைகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பார்கள்.
இந்த வருடமும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி எளிமையான முறையில் கொண்டாட மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி இன்று ரம்ஜான் எனும் ஈகைத் திருநாளை இஸ்லாமியர்கள் எளிமையான முறையில் வீடுகளிலேயே தொழுகை நடத்தி கொண்டாடினர். மேலும் இன்று காலை புத்தாடைகள் உடுத்தி சிறப்பு தொழுகையிலும் ஈடுபட்டனர்.
இதேபோல் கோபி, அந்தியூர், பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் எளிமையான முறையில் ரம்ஜான் பண்டிகையை வீடுகளில் கொண்டாடினர்.