08/May/2021 09:53:04
ஈரோடு, மே: ஈரோட்டில் மது போதையில் முதியவர் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட டி.வி.எஸ். வீதியில் சுமார் 55 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் ரத்தகாயங்களுடன் இறந்துகிடந்தார். இதைப்பார்த்த சுமை தூக்கும் தொழிலாளர் கள் அளித்த தகவலின்பேரில் ஈரோடு டவுன்போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார். எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. அந்த முதியவர் இறந்த இடத்தில் பெரிய கல் கிடந்ததைப் பார்த்த போலீஸார் மர்ம நபர் கல்லால் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்து அந்த பகுதியில் பொருத்தப் பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர் கல்லை எடுத்து கீழே போட்ட காட்சி அதில் பதிவாகி இருந்தது.
இறந்தவர் அந்தப் பகுதியில் பிச்சை எடுத்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு தூங்கி வந்தது தெரிய வந்தது. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை யை துரிதப்படுத்தினர்.
சிசிடிவி காட்சியிவ் இருந்தவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபா (40) என்பதும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் இரவு நேரம் தங்கி கிடைக்கும் வேலையை செய்து வந்ததும், நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வந்த ஜெபா பன்னீர்செல்வம் பார்க் அருகே இரவில் படுத்து தூங்க வந்போது அருகில் படுத்து இருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து ஜெபாவை டவுன் போலீசார் கைது செய்தனர்.