29/Apr/2021 09:43:56
ஈரோடு, ஏப்: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் அதிவிரைவு படை போலீஸ் பாதுகாப்பு: முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த
ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. ஈரோடு
மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொது மக்கள் வாக்களிக்கும் வகையில்
2741 சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் 76.91 சதவீதம் வாக்கு பதிவானது. சித்தோடு
சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோபி, பவானிசாகர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான
வாக்குகள் கோபியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால்
சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி
வளாகத்தில் ஆயத்த
பணி தொடங்கியுள்ளது.
வாக்கு
எண்ணிக்கை நிலவரத்தை தெரிவிக்க ஒலிபெருக்கி பொருத்தும்
பணி தொடங்கியது. 6 தொகுதிகளுக்கு தனித்தனி கட்டிடத்தில் வாக்குகள் எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர், முகவர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வருவோரை குறிப்பிட்ட
கட்டிடத்துக்கு நேரடியாக
செல்லும்படி வழிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.ஒரு தொகுதியினர் வேறு
தொகுதி மையத்துக்குள் செல்லாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்படுகிறது.
இரவிலும் வாக்கு எண்ணிக்கை தொடரும் என்பதால்
தேவையான பகுதிகளில் கூடுதல் விளக்குகள் அமைக்கப்படுகிறது.
இதைப்போல் கோபியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் அனைத்து முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு
எண்ணும் நாளில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலிருக்க
போலீஸ் தரப்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு
வருகிறது.
இதுகுறித்து, மாவட்ட எஸ்பி தங்கத்துரை கூறியதாவது:
சித்தோட்டில் ஒரே நேரத்தில் 550 போலீசாரும், கோபியில் 150 போலீசார் என
700 போலீசார் வாக்கு எண்ணும் நாளில் பாதுகாப்பு பணியில்
ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் தபால் வாக்குப் பெட்டிகள்
துணை ராணுவத்தினர் மூலம் எடுத்து வரப்படும்.வேட்பாளர்கள் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் தவிர பிறர் உள்ளே அனுமதிக்கப் பட
மாட்டார்கள்.
எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கும் வரை மாவட்டத்துக்குள் சட்டம் ஒழுங்கு பிரச்னை
ஏற்படாமலிருக்க 5 டி.எஸ்.பி- க்கள் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்படுவர்.முக்கிய
இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். 5 துணை கோட்டங்களிலும் தலா 20 பேர் கொண்ட அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்
என்றார்