19/Jun/2021 08:00:47
புதுக்கோட்டை: புதுக்கோட்டை
மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி பகுதி மதுக்கடைகளில் இருந்து அதிகளவில்
மதுபானங்களை வாங்கி கடத்த முயன்ற மன்னார்குடியைச்சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது
செய்தனர்.
கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. அதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் எல்லையோர பகுதிகளில்
இருக்கும் மதுக்கடைகளில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர்
மதுபானங்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுக்கடைகளில் அதிகளவில் கூட்டம் கூடுகிறது.
இந்நிலையில்,
கறம்பக்குடி அருகேயுள்ள புதுப்பட்டி டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து 89
மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு செல்ல முயன்ற மன்னார்குடியைச் சேர்ந்த செல்லத்துரை
மகன் முரளியை(33)கறம்பக்குடி போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காடு டாஸ்மாக் மதுபானக் கடையில் இருந்து 8 பெட்டிகளில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு காரில் சென்றுகொண்டிருந்த மன்னார்குடியைச் சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன்(28), எஸ்.மகேந்திரன்(28), பெருமாள் மகன் மணிகண்டன்(28) ஆகியோரை ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு
பயன்படுத்திய காரையும் , மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.