17/Apr/2021 11:19:58
ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வீட்டில் கள்ளநோட்டு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கள்ள நோட்டு மற்றும் ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவிட்டிருந்தார். அதன்படி அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப் படையினர் கள்ள நோட்டு புழக்கத்தில் விடும் கும்பல் குறித்து ரகசிய விசாரணை நடத்தினர்.
அப்போது பவானி பழனியாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கெனவே இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கள்ள நோட்டு அச்சடித் து வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் அவரது நடவடிக்கை களை கண்காணித்து வந்தநிலையில் அந்தியூர் அருகே உள்ள காட்டு பாளையம் என்ற பகுதியில் செல்வம்( 54) என்பவரது வீட்டில் கோவிந்தராஜ் கள்ளநோட்டுகள் தயாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் சனிக்கிழமை அதிகாலை அந்த வீட்டினுல் அதிரடியாக நுழைந்தனர். அப்போது ஜெராக்ஸ் எந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த கோவிந்தராஜ், செல்வம் ஆகியோர் தப்பி ஓட முயன்றனர் . ஆனால் போலீ ஸார் இருவரையும் பிடித்தனர்.
பின்னர் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 500 ரூபாய் 200 ரூபாய் 100 ரூபாய் ஆகிய நோட்களில் ரூ19 ஆயிரத்து 800 ரூபாயும், அச்சடிக்கப்பட்டு கட்டிங் செய்யப்படாமல் ஒரு லட்சத்து 90 ஆயிரத்தி 800 ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றினர்.
மேலும் அவர்களிடமிருந்து கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் மிஷின், கலர் பேப்பர், கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் செல்வம் ஆகியோரை கைது செய்த போலீசார் இருவரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.