08/Apr/2021 11:20:55
புதுக்கோட்டை, ஏப்ரல்: புதுக்கோட்டை மாவட்டத்தில்; உள்ள குறு, சிறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் வரும் (11.4.2021) ஞாயிற்றுக்கிழமை முதல் சுகாதாரத்துறையினரால் நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி கூறியதாவது: கொரோனா தொற்று அதிகபித்து வரும் நிலையில் பல்வேறு நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில்; இயங்கிவரும் குறு, சிறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக வியாழக்கிழமை சுகாதாரத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை 9,000 -க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நாள்தோறும் பணிக்கு வரும் போது வெப்பமானி மூலம் உடலின் வெப்பநிலையை சோதித்தல், முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுது சுகாதாரத்துறையின் மூலம் 11.04.2021 முதல் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே முழுமையாக கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க முடியும் என்றார்.
இந்த மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரிபுரசுந்தரி, துணை இயக்குநர் (சுகாதாரம்) பா. கலைவாணி, துணை இயக்குநர் (தொழிற்சாலைகள்) மகேஸ்வரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.