11/Feb/2021 08:23:22
ஈரோடு, பிப்:ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகரில் புதைசாக்கடைத்திட்டத்துக்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதைக் கண்டித்து அங்கு பணியை மேற்கொண்ட ஜேசிபி இயந்திரத்தை அப்பகுதி மக்கள் முற்ருகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் புதை சாக்கடைத்திட்டப்பணிகள் பல கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேரும் கழிவுகளை சுத்திகரிப்பதற்காக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஏற்கெனவே பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கு பணிகளை தொடங்குவதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டுபொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிக்குள் பட்ட சிந்தன் நகர், மாதவ காடு ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் சுற்று வட்டார பகுதிகளில் பள்ளிக் கூடங்கள் உள்ளன. இந்நிலையில், இங்கு புதை சாக்கடைக்கான பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது.
இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு ள்ளது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குடியிருப்புகள் நிறைந்த எங்கள் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது. இதற்கு பதிலாக வேறு இடத்தில் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அங்கு தொடங்கிய பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.