01/Apr/2021 02:16:03
புதுக்கோட்டை, மார்ச்: திருமயம் சட்டமன்ற தொகுதியில் பொன்னமராவதி ஒன்றியத்துக் குள்பட்ட 40 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து சூறாவளி புதன்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறார். அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி, அரிமளம், திருமயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 100 -க்கும் மேற்பட்ட ஊராட்சி களைச் சேர்ந்த 400 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட மரவாமதுரை கிராமத்தில் காலை 7 மணியளவில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பிரசாரத்தைத் தொடங்கி கிராம மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது: அதிமுக அரசு கடந்த பொங்கல் பண்டிகைக்காக ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.2500 வழங்கியது மேலும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கியது.
அதே போல, தற்போது நடைபெறும் தேர்தலுக்காக அதிமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ள வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் உள்ளிட்டவை நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அதிமுக அரசு மீண்டும் அமையும் வகையில் இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து, கங்காணிபட்டி, சங்கம்பட்டி, ந வடக்கிப்பட்டி, நகரப்பட்டி, மேட்டாம்பட்டி, மூக்கழகன்பட்டி, செங்களாப்பட்டி, மேலக்கல்லம்பட்டி, பனையமங்கலப்பட்டி, கல்லம்பட்டி, அம்மாபட்டி, ஆவிங்கோன்பட்டி, எம்ஜிஆர் நகர், சொக்கநாதபட்டி, அம்மன்குறிச்சி, கருமங்காடு,துலுக்கஊரணி, சின்னபிச்சம்பட்டி
பிடாரம்பட்டி, வடக்கிப்பட்டி, செம்மலாப்பட்டி, பண்ணைக்களம், ஈசிகூடம், வைரம்பட்டி, ஆலவயல் உள்பட 40 கிராமங்களில் ஒரே நாளில் சுற்றுப்பயணம் செய்து அதிமுக 10 ஆண்டுகால சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதியிலுள்ள சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.