logo
ஈரோடு மாவட்டத்தில்  இதுவரை 13,216 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: சுகாதாரத் துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 13,216 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: சுகாதாரத் துறையினர் தகவல்

16/Mar/2021 05:35:11

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில்  இதுவரை 13,216 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக  சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 உலகம் முழுவதும் கொரோனா மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் முதற் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய  2 கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில்  பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு போடப்பட்டது.

 ஈரோடு மாவட்டத்திலும் 5 அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 2 தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரியும் டாக்டர்கள் நர்சுகளுக்கு  கோவிஷீல்டு தடுப்பூசி முதற்கட்டமாக   போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் முதல் 60 வயது மேல் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதேபோல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 24 அரசு  மருத்துவ மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுவரை உள்ள இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில்  60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

மார்ச்1 -ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 13,216 முதியோர், மற்றும் இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4423 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளொன்றுக்கு 66 மையங்களில் முதியவர்களுக்கு, இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Top