03/Jun/2021 10:48:50
புதுக்கோட்டை, ஜூன்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மச்சுவாடி வனத்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் (3.6.2021) நடவு செய்தார்.
வனத்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. வேம்பு, புங்கன், ஒதியன், அரசு, ஆலங்கன்று போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இதில் புதுக்கோட்டை மச்சுவாடி வனப்பகுதியில் 600 மரக்கன்றுகளும், கீரனூர் ஆலடி பெருமுத்துக்காடு வனப்பகுதியில் 400 மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது. இந்த மரக்கன்றுகளை தினமும் உரிய முறையில் நீர் ஊற்றி சிறந்த முறையில் பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மரம் வளர்த்தால் சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும். எனவே அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து சமுதாயம் நலனுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன்.
இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் சுதாகர், உதவி வனச்சரக அலுவலர்கள் சதாசிவம், சங்கர், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிக்குமார், வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.