logo
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணிவேட்பாளர்களின் வெற்றிக்காக சிபிஎம்  பாடுபடும்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணிவேட்பாளர்களின் வெற்றிக்காக சிபிஎம் பாடுபடும்

12/Mar/2021 05:56:56

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பார்களின் வெற்றிக்காக களப்பணியாற் றுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் பேசினார். தேர்தல் களப்பணிகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்  பேசினார்.

 திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை(தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதியை ஒதுக்கித்தந்த திமுக தலைமைக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

கந்தர்வகோட்டை தொகுதி மட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, விராலிமலை ஆகிய அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்றுவார்கள்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், எஸ்.சங்கர் என்.பொன்னி, எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், வி.துரைச்சந்திரன், சி.சுப்பிரமணியன், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Top