logo
ஆலங்குடி தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் போராட்டம்

ஆலங்குடி தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் போராட்டம்

11/Mar/2021 03:20:26

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு கட்சித்தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி ஆலங்குடி தொகுதியைச் சார்ந்த அதிமுகவினர்  போராட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தர்ம தங்கவேல் என்பவரை புதன்கிழமை அதிமுக தலைமை அறிவித்தது. 

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தர்ம தங்கவேலு  கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர். மாற்றுக் கட்சியிலிருந்து  கட்சியில் சேர்ந்தவுடனேயே  அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளது அதிமுகவினரை பெரும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது. 


காலம்காலமாக அதிமுகவிற்கு கட்சியில் தொண்டனாக இருந்து வரும் பலர் இருக்கும்போது இத்தனை ஆண்டு காலமாக அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தர்ம தங்கவேலு என்பவருக்கு வாய்ப்பு கொடுத்தது கடும் அதிர்ச்சியளிப்பதாக கட்சியினர் தெரிவித்தனர். எனவே அவரை மாற்றி வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


ஆலங்குடி தொகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வேன், கார் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் வந்த 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியிலிருந்து அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற முழக்கமிட்டபடி  பேரணியாகச் சென்றனர்.


  பேரணி கடைவீதி, வடகாடு முக்கம், அரசமரம் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியின்போது தொண்டர் ஒருவர்  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீசார் அவரை மீட்டு தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். வேட்பாளரை மாற்றும் வரை தினமும் தொடர்ந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதால்  தொகுதி முழுதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Top