03/Dec/2020 02:30:24
ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை ஏரியின் முழு கொள்ளளவான 45.88 மில்லியன் கன அடியும் நிரம்பியுள்ளதால் ஏரிக்கு வரும் 200 கன அடி தண்ணீரையும் உபரிநீர் ஓடையில் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் ஓடையின் கரையோரத்தில் உள்ள விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஓடத்துறை ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் 15 அடி உயரமும் 45.88 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்ட மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரிக்கு கீழ்பவானி பிரதான பாசன கால்வாய் கசிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் வழிந்தோடும் மழைநீர் ஆகியவை ஏரிக்கு தண்ணீர் வரத்தாகும். இந்த ஏரியின் மூலம் 72 ஏக்கர் பாசன பரப்பும் உள்ளது.
கடந்த ஆண்டுகளில் தமிழக அரசும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு தரைகள் பலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கபட்டதால் அதன் கசிவுநீர் தண்ணீர் ஓடத்துறை ஏரிக்கு வந்து சேர்ந்தது. கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையினால் நீர் வரத்து அதிகரித்து ஏரியின் முழுக்கொள்;ளளவான 15 அடி உயரமும் 45.88 மில்லியன் கனஅடி கொள்ளளவும் நிரம்பியுள்ளது.
இதனால் ஏரிக்கு வரும் விநாடிக்கு 200 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. மேலும்; மழை அதிகரித்தால் ஏரிக்கு தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும் என்றும் அப்போது உபரிநீர் ஓடையிலும் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படும் என்றும் அதனால் உபரிநீர் ஓடையில் வசிக்கும் விவசாயிகள் பாதுகாப்பாக மேடான பகுதிக்கு செல்லுமாறும் கால்நடைகளை ஓடையில் மேய்க்கவோ துணிதுவைக்கவோ கூடாது என்றும் பொதுப்பணித்துறையின் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.