17/Feb/2021 06:10:34
ஈரோடு, பிப்: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று நிகழ்ச்சி ஈரோட்டில் 21, 22 --இல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
மு .க . ஸ்டாலின் ஏற்கெனவே மூன்று கட்ட பிரசாரத்தை முடித்து விட்ட நிலையில், வியாழக்கிழமை இன்று முதல் 4-ஆவது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
இந்நிலையில் வருகிற 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணி அளவில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை மு .க .ஸ்டாலின் மேற்கொள்கிறார். பெருந்துறையில் இருந்து விஜயமங்கலம் செல்லும் இடைப்பட்ட பகுதியான கடப்பமடை கலைஞர் திடலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மு. க .ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுவாக பெற்றுக் கொள்கிறார். இதில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து மறுநாள் 22-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரக் கூட்டம் அந்தியூர் அடுத்த பங்களாபுதூர், புஞ்சை துரையம் பாளையம், டி.என். பாளையம் ஒன்றியம், சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் நடைபெறுகிறது.
இதில், மு. க .ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெறுகிறார். இதில் கோபி, பவானி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய தொகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் செய்து வருகின்றனர்.