logo
புதுக்கோட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் தொடக்கி வைத்தார்

25/Feb/2021 11:15:27

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டையில்  டாம்ப்கால்  நிறுவனத்தின் இரண்டாவது  மருந்து உற்பத்தி பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வியாழக்கிழமை  தொடங்கி வைத்தார்.

 புதுக்கோட்டை  அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் டாம்ப்கால் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி பிரிவு தொடக்க  விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தலைமை வகித்தார்.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ( டாம்ப்கால்) இயக்குநர் சு.கணேஷ் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது: மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் டாம்ப்கால் மருந்து  உற்பத்தி நிறுவனம்  சென்னை ஆலந்தூரில் செயல்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரபதி ஆகிய பிரிவுகளுக்கு  தேவையான மருந்துகள் இங்கு தயாரிக்கப்பட்டு  தமிழகம் முழுவதும் உள்ள அரசு சித்த மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை.யிலுள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில்  டாம்ப்கால் நிறுவனத்தின் இரண்டாவது  மருந்து உற்பத்தி பிரிவு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 இந்த டாம்ப்கால் மருந்து செய்  நிலையத்தில் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீக், சூரணம், லேகியம், தைலம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரபதி ஆகிய பிரிவுகளுக்கு  தேவையான மருந்துகள் உள்படட பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து நேரடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

இந்த உற்பத்தி பிரிவு தொடங்கியதன் மூலம் சென்னையிலுள்ள டாம்ப்கால்  நிறுவனத்துக்கு செல்வது தவிர்க்கப்பட்;டு தென் மாவட்டங்களுக்கு புதுக்கோட்டையில் இருந்து மருந்துகளை விரைவாக அனுப்ப முடியும்.  நேரமும் அலைச்சவும் மிச்சமாகும். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக இரண்டாவதாக உருவாக்கப்பட்டுள்ள டாம்ப்கால் மருந்து உற்பத்தி பிரிவு மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். 

மேலும் கொரோனா தொற்றின்போது புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறப்பாக சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  பாராட்டுகள் எண்றார் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை டாம்ப்கால் பொது மேலாளர் அங்கையற்கன்னி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா, டாம்ப்கால் சிறப்பு அலுவலர் மோகன், மாவட்ட ஊராட் சிக் குழுத்தலைவர் த.ஜெயலெட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான், ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர்  க.  பாஸ்கர், மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் சேட் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top