15/Feb/2021 10:52:36
எகிப்து நாட்டில் 12 வயது சிறுமி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பாடம் நடத்தி வரும் சம்பவம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருத்தொற்று அதிக உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தி வரும் சம்பவம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.எகிப்து கெய்ரோவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்மிடா என்ற பகுதியைச் சேர்ந்தவர் 12 வயதுடைய ரீம் எல்-கௌலி எனும் சிறுமி. இச்சிறுமி சுமார் 30 குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.
இது குறித்து சிறுமி கூறியதாவது, தெருக்களில் விளையாடுவதற்கு பதிலாக பாடம் கற்றுத் தந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினேன். அதன்படி நான் காலையில் எழுந்து பிரார்த்தனை செய்துவிட்டு குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று கற்பித்து வருகிறேன். அரபு, கணக்கு, ஆங்கிலம் ஆகிய பாடங்களை சொல்லித் தருகிறேன் என்று சிறுமி தெரிவித்தார். இவரது இந்த சேவையை கண்ட உள்ளூர் தொண்டுநிறுவனம் ஒன்று சிறுமிக்கு வெள்ளை போர்டையும் மார்க்கரையும் வணங்கியது.
மேலும் இச்சிறுமி குறித்து அவரிடம் படிக்கும் முகமது அப்தெல் மோனீம் என்ற 9 வயதான சிறுவன் கூறியதாவது, பள்ளிகள் மூடப்பட்டதும் நாங்கள் பாடங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக ரீம் எல்-கௌலி எங்களுக்கு பாடம் எடுக்க தொடங்கினார்.எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.அவர் நடத்தும் பாடங்களை என்னால் எளிமையாகவும், நன்றாகவும் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்தார்.