24/Jun/2021 08:08:51
ஈரோடு, ஜூன்: பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தினர் வரவேற்பும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ரமேஷ், செயலாளர் ஜீவாதங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை:
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது. தொடர்ந்து தமிழக முதல்வர் பத்திரிகையாளர்களின் நலன் சார்ந்தும், தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை காப்பாற்றும் வகையில், சீர்மிகு அறிவிப்புகளை தொடர்ந்து செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதைப் போல புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு.மதியழகன், செயலர் சா.ஜெயப்பிராஷ், பொருளாளர் க. சுரேஷ், துணைத்தலைவர் இரா. பகவத்சிங், துணைச்செயலர் க. சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை:
பத்திரிகையாளரான கலைஞர் கருணாநிதியின் மகனாக தன்னை வெளிப்படுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் ஆட்சி காலத்தில் பத்திரிகையாளர்களின் வாழ்வு வளம் பெறும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என நம்புவதாகவும் குறிப்பிட்டனர்.