14/Feb/2021 04:45:12
ஈரோடு, பிப்: உலகம் முழுவதும் (பிப்.14) காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காதல் ஜோடிகள் தங்கள் காதலை ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்தும் விதமாக பரிசுப் பொருட்களை பரிமாறி கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இன்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள வ. உ .சி பூங்காவில் காதலர் தினத்தன்று 50-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் வந்து .உற்சாகமாக தங்களது பொழுதைக் கழிப்பார்கள்.
ஆனால் இந்த வருடம் வ. உ. சி. பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பூங்காவிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வ உ சி பூங்கா நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இது தெரியாமல் வ.உ.சி பூங்காவுக்கு வந்த சில காதல் ஜோடிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இன்னும் சில காதல் ஜோடிகள் ஈரோடு பேருந்து நிலையம், கோயில்களில் வந்து காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
இன்னும் சில காதல் ஜோடிகள் தியேட்டர்களில் சென்று புது படங்களை பார்த்து மகிழ்ந்தனர். ஒரு சிலர் காதல் வாழ்த்து அட்டையை வழங்கினர்.கொடிவேரி அணை பகுதியில் காலையிலிருந்தே காதலர் தினத்தை கொண்டாட ஜோடி ஜோடியாக வந்தனர். பூங்காவில் அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
பவானிசாகர் பூங்காவிலும் காதல் ஜோடிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் வியாபாரம் வழக்கத்தை விட அதிகமாகவும் விலை சற்று அதிகமாகவும் விற்பனையானது.