05/Dec/2020 02:49:35
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மன்னார் வளைகுடாவுக்கு அருகே கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கும். இதன் காரணமாக, தமிழகத்தின் கடலூர், வேலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை பகுதிகளிலும் கன மழையும் பெய்யும்.ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கன மழை முதல் மிகக் கனமழையும்,
சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக் கூடும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு: கடலூர் கொத்தவாச்சேரி – 19 செ.மீ., நாகப்பட்டினம், காரைக்கால் – 16 செ.மீ., குடவாசல், புவனகிரி – 15 செ.மீ., சேத்தியாதோப்பு – 14 செ.மீ., தரங்கம்பாடி – 13 செ.மீ., சீர்காழி, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், திருவண்ணாமலை வெம்பாக்கம், ஸ்ரீமுஷ்ணம் – 12 செ.மீ., ராமேஸ்வரம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருத்துறைப்பூண்டி, காயல்பட்டினம் – 11 செ.மீ.
ஸ்ரீபெரும்புதூர், கொள்ளிடம், சென்னை எம்.ஜி.ஆர். நகர்– 10 செ.மீ., ஊத்துக்கோட்டை, செம்பரம்பாக்கம், தூத்துக்குடி, சிதம்பரம் – 9 செ.மீ., மயிலாடுத்துறை, கும்மிடிப்பூண்டி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, மண்டபம், மணல்மேடு, சோழிங்கநல்லூர் – 8 செ.மீ., விழுப்புரம், போடிநாயக்கனூர், வேதாரண்யம், திருவிடைமருதூர், திருச்செந்தூர், பூந்தமலலி, நன்னிலம், விருத்தாசலம், பாம்பன் – 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.