10/Feb/2021 05:03:27
ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 35-ஆவது கிளையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்து ரூ. 61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் மாவட்டம் தோறும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கிகள் திறக்கபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அந்தியூர் அடுத்துள்ள அத்தாணியில் புதிய கூட்டுறவு வங்கி கிளையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் திறந்து வைத்து வங்கி கணக்கையும் தொடங்கி வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ. 43.50 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு வளர்ப்பு கடன்கள் மற்றும் ரூ.17.61 லட்சம் மதிப்பில் 69 பேருக்கு பண்ணைசாராக் கடனுதவிகளையும் வழங்கினார்.
முன்னதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பயனாளிகள் மத்தியில் பேசுகையில், தமிழக அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்பொழுது விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு விவசாயிகள் கூட்டுறவு வங்கி கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இதே போன்று விவசாய இடு பொருட்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கி வழங்கி வருகின்றது எனக்குறிப்பிட்டார். இதில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.