logo
வைகுண்ட ஏகாதசி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்தலாம்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அனுமதி

வைகுண்ட ஏகாதசி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்தலாம்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அனுமதி

20/Dec/2020 07:37:46

ஈரோடு, டிச: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வரும், 25-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், சொர்க்கவாசல் திறக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாறாக காலை, 6 மணிக்கு மேல் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து மூலவரை வழிபட்டு சொர்க்கவாசல் வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். பகல் பத்து, ராப்பத்து என, 21 நாள் இவ்விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவம் கடந்த 15-இல் துவங்கியது.

இதனையொட்டி உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் மூலவர் கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். வரும், 24ல்  மூலவர் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா வரும் 25-இல் அதிகாலை 4:45 மணிக்கு நடக்கிறது. முன்னதாக அதிகாலை 2:45 மணிக்கு திருமஞ்சனம், மகா தீபராதனை காண்பிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி நடக்கும். இந்த 10 நாட்களும் மூலவருக்கு மூத்தங்கி சேவையும், ராப்பத்து நிகழ்ச்சியின் முடிவில் நம்மாழ்வார் மோட்சம் அடையும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு கட்டுப்பாடு

வைகுண்ட ஏகாதசி திருவிழா கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்திக்கொள்ள, மாவட்ட கலெக்டர் கதிரவன் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து சனிக்கிழமை ஈரோடு வருவாய் கோட்டாட்சியர்  சைபுதீன், டிஎஸ்பி ராஜூ தலைமையில் அதிகாரிகள் கோயிலில் ஆய்வு செய்து, விழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இதில், சொர்க்கவாசல் திறப்பின் போது, சாமி சொர்க்கவாசல் வழியாக பிரவேசம் செய்யும் போது, கோயில் நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

 இதையடுத்து பக்தர்களுக்கு காலை 6 மணிக்கு மேல் உற்சவரையும், மூலவரையும், தயாரையும் வழிபட்டு சொர்க்கவாசல் வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பூஜை கடைகளுக்கு அனுமதி இல்லை

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் முன் உள்ள பூ, பூஜை கடைகளுக்கு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின் படி வரும் 24-ஆம் தேதி பகல் 12 மணி முதல் 25-ஆம் தேதி இரவு வரை கடை வைக்க அனுமதிக்க கூடாது என ஆர்டிஓ சைபுதீன் உத்தரவிட்டார். 26-ஆம் தேதி முதல் வழக்கம்போல் கடைகள் அமைத்து கொள்ளலாம் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். 


Top