03/Dec/2020 02:04:17
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று(3.12.2020) நடைபெற்ற அரசு விழாவில் 754 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் மதிப்பில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது: ஏழை, எளியோர், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் நலன் காக்க தமிழகமுதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக பயிர்கடன், மத்திய காலக்கடன், நகைக்கடன், வட்டியில்லா கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கறவை கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வருவாய் துறையின் மூலம் தகுதி வாய்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 359 பயனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
ஏழை, எளிய மக்களின் நலன் கருதி வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கப்படுகிறது. சொந்த நிலம் இருப்பவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கான மானியத் தொகை வழங்கப்படுகிறது என்றார் அமைச்சர் கருப்பண்ணன்.
இந்நிகழ்ச்சியில், 177 பயனாளிகளுக்கு ரூ.21,24,000 மதிப்பில்ல் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 146 பயனாளிகளுக்கு ரூ.17,52,000 மதிப்பில் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 6 பயனாளிகளுக்கு ரூ.72,000 மதிப்பில் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.1,00,000 மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலையினையும், 4 பயனாளிகளுக்கு ரூ.1,80,000 மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், 390 பயனாளிகளுக்கு ரூ.39,40,000 மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என 754 பயனாளிகளுக்கு ரூ.84,63,200 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.