29/Nov/2020 06:44:18
ஈரோடு: கொடுமுடியில் வரலாறு காணாத அளவுக்கு அதிகபட்சமாக 334 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதில், நவ.27 இரவு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், பெரும்பாலான பகுதகிளில் லேசான மழையும் பெய்தது.
கொடுமுடி பகுதியில் நவ.26 இரவு 7 மணி முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கொடுமுடியில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று இரவு முதல் நேற்று அதிகாலை வரை அதிகபட்சமாக 334.4மில்லி மீட்டர்(34சென்டிமீட்டர்) மழை பொழிந்துள்ளது.
இந்த மழையின் காரணமாக கொடுமுடி வடக்கு தெரு, நுழைவு பாலம் போன்ற 17-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மக்களை அதிகாரிகள் உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கொடுமுடிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. இதனால், அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இதில், மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: ஈரோடு-5, கோபி-1, கொடுமுடி-334.4, மொடக்குறிச்சி-60, சென்னிமலை-11, எலந்தகுட்டைமேடு-1 ஆகிய அளவுகளில் மழை பதிவாகியுள்ளது.