logo
நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 50 சதவீதம் மானியம் :ஈரோடு ஆட்சியர் தகவல்

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 50 சதவீதம் மானியம் :ஈரோடு ஆட்சியர் தகவல்

18/Nov/2020 10:25:15

ஈரோடு: இதுகுறித்து ஈரோடு  மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 2020-2021ம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பு மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 இந்த திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு அதிகபட்சமாக 3 பேர் வீதம் 35 விவசாயிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 சதவீதம் மானியமாக கோழிக்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.15 ஆயிரம், தீவனம் கொள்முதல் செய்ய ரூ.22 ஆயிரத்து 500, அடைகாக்கும் கருவி கொள்முதலுக்கு அதிகபட்சமாக ரூ.37 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். 

இந்த திட்டத்தில் கிராம ஊராட்சியில் நிரந்தரமாக குடியிருக்கும் பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோர் 1,000 கோழிகள் வளர்க்கக்கூடிய 2 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவு கொண்ட பண்ணை கொட்டகை அமைப்பு சொந்தமாக வைத்திருக்க வேண்டும். 

கோழி வளர்ப்புக்கு தேவையான தீவன தட்டுகள், தண்ணீர் தட்டுகளை பயனாளிகளே கொள்முதல் செய்ய வேண்டும்.விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீத பயனாளிகளாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவார்கள். பயனாளிகள் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையால் வழங்கப்படும் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டம், கோழிப்பண்ணை அமைக்கும் திட்டத்தில் பயன்பெறாதவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். முதற் கட்டமாக 3 நாட்கள் அடிப்படை கோழி வளர்ப்பு தீவன மேலாண்மை, தடுப்பூசி போடுதல் போன்ற பயிற்சியும், அடைகாக்கும் கருவி கொள்முதல் செய்யப்படும்போது 2 நாட்கள் குஞ்சு பொறிப்பு குறித்த பயிற்சியும் வழங்கப்படும். எனவே தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி டாக்டரை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார். 


Top